கோவை: சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியுமே தேர்தல் அறிக்கையை வெளி யிடுகின்றன. ஏற்கெனவே திமுக, அஇஅதிமுக சார்பில் தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டு உள்ளன.
இதைத்தொடர்ந்து, கோவையில் நேற்று மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசனும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசினார்.
ராணுவத்தில் இயங்கும் கேன்டீன்களைப் போல நியாய விலையில் பொருள்களை விற்பனை செய்ய மக்கள் கேன்டீன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
ஆனால், இதையும் அம்மா உணவகத்தையும் ஒன்றாகப் போட்டு குழப்பிக் கொள்ளவேண்டாம் என்றும் அவர் கூறினார்.
அனைத்து மாநகராட்சிகளுக்கும் மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்படும் என்றும் கூறியவர், இல்லத்தரசிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என்றார்.
ஊழலற்ற, நேர்மையான மக்கள் நலம் காக்கும் மக்களாட்சி நடை முறைக்கு வரும்.
விவசாயம், தொழில் உற்பத்தியை உயர்த்தி தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை அடுத்த 10 ஆண்டுகளில் 15 முதல் 20% வளர்ச்சி பெறுவதை உறுதி செய்து ரூ.60 முதல் 70 லட்சம் கோடியாக உயர்த்துவோம்.
இரண்டு கோடி பேருக்கு தரமான வேலை வாய்ப்பை உறுதிசெய்து, தனிநபர் வருமானத்தை 7 முதல் 10 லட்சமாக உயர்த்தி மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும் என வாக்குறுதிகளை அவர் அளித்தார்.

