சென்னை: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பில், சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசை இந்திய தேர்தல் ஆணையம் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
விரைவில் அவர் மீது கைது நடவடிக்கை பாயும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் அவர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறும் என சிபிசிஐடி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 16ஆம் தேதி சிபிசிஐடி சார்பில் விசாரணை அறிக்கை சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் சிறப்பு டிஜிபி மீதான புகாரில் முகாந்திரம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த மாதம் பெரம்பலூரில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிர சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவரது பாதுகாப்புப் பணிக்காக சென்றுவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்த பெண் எஸ்பியிடம் சிறப்பு டிஜிபி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்பதுதான் புகார்.
இவ்விவகாரம் குறித்து தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், புகார் அளிக்கச் சென்ற பெண் எஸ்பியை புகார் அளிக்கவிடாமல் தடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து மாவட்ட எஸ்.பி. மட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான சிறப்பு டிஜிபி இதுவரை பணியிடை நீக்கம் செய்யப்படாதது ஏன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளிக்கப்பட, தற்போது தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

