புதுடெல்லி: இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறையால் 20 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பல்வேறு வகையில் பாதிக்கப்படுவதாக 'யுனிசெஃப்' மேற்கொண்ட அண்மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும், ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை என்று மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு அன்றாட வாழ்க்கை என்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிட்டது என்கிறார் 'யுனிசெஃப்' இந்திய பிரதிநிதி யாஸ்மின் அலி ஹக்.
"தண்ணீர் பற்றாக்குறையானது குழந்தைகளை சுகாதாரமற்ற தண்ணீரால் பரவும் நோய்களுக்கு ஆளாக்குகிறது. மேலும் கை கழுவுதல் போன்ற பாதுகாப்பான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதையும் தடுக்கிறது.
"பெண்கள் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுப்பது சுமையாக உள்ளது. இதனால் அவர்களின் கல்வி, வேலை வாய்ப்புகள் சீர்குலைந்து போகின்றன," என்கிறார் யாஸ்மின் அலி ஹக்.
"கொரோனா தொற்று நோய் சுத்தமான நீர், சுகாதாரத்திற்கான அணுகலை நிறுவுவதற்கான முக்கியமான தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே நாடு முழுவதும் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை எனத் தெரியவந்துள்ளது.
மேலும், 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட பள்ளிகளில் கழிவறை வசதியும் இல்லை என்றும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
"அனைத்து மாநிலங்களும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் அனைத்து (அரசு, தனியார், உதவிபெறும்) பள்ளிகளிலும் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனி கழிவறைகள், குடிநீர் வசதிகளை ஏற்படுத்துமாறு அந்தந்த அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.