புதுடெல்லி: அமேசான் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள முதல் இந்திப் படத்தில் முன்னணி நாயகன் அக்ஷய் குமார் (படம்) நடித்துள்ளார்.
இதன் மூலம் பாலிவுட் இந்தி திரையுலகில் கால்பதிக்கிறது அமேசான். 53 வயதான அக்ஷய் குமார் நடித்துள்ள அந்தப் புதிய படத்துக்கு 'ராம்சேது' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் இந்தியாவில் இணையம் வழி வெளியாகும் திரைப்படங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு பெரிய நிறுவனங்கள் இந்திய சந்தையைக் கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
திரையரங்குகளுக்குச் செல்ல விரும்பாத ரசிகர்களும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த ரசிகர்களும் இணையம் வழி படங்களைப் பார்க்க முன்னுரிமை அளிக்கின்றனர்.
'ராம்சேது' படத்தின் வெளியீட்டுத் தேதியை அமேசான் இன்னும் அறிவிக்கவில்லை. ராமர் சேது பாலமானது இந்து மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயமாகும்.
இந்நிலையில் இந்திய கலாசாரத்தின் குறிப்பிடத்தக்க பகுதி சார்ந்த கதையை இளையர்கள் மத்தியில் கொண்டு செல்வது தமக்கு மனநிறைவு தருவதாக படத்தின் நாயகன் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.
அமேசான் நிறுவனம் மூலம் இத்திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களைச் சென்றடையும் என்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
2020ஆம் ஆண்டுக்கான அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகர்களுக்கான 'ஃபோர்ப்ஸ்' பட்டியலில் அக்ஷய் குமார் முதலிடம் பெற்றுள்ளார்.