கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்கட்ட தேர்தல் நெருங்கும் நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களை, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி (படம்), மகாபாரத வில்லன் கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மேற்கு வங்காளத்தில் எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றியே ஆகவேண்டும் என பாஜக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட கட்சியின் பெருந்தலைவர்கள் அனைவரும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புரூலியா மாவட்டத்தில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் பேசும்போது, "மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றத்துக்கான 'கவுன்ட்-டவுன்' தொடங்கிவிட்டது. மே 2ஆம் தேதி மம்தா விடை பெறுவார். அப்போதுதான் இங்கு உண்மையான மாற்றம் வரும்," என்று பேசினார்.
இந்நிலையில் கிழக்கு மிட்னாபூரில் திரிணாமூல் வேட்பாளருக்கு ஆதரவாக முதல்வர் மம்தா நேற்று பேசும்போது, "பாஜகவுக்கு குட்பை சொல்லி விடுங்கள். பாஜக நமக்கு வேண்டாம்.
"பிரதமர் மோடியின் முகத்தை நாம் பார்க்க விரும்பவில்லை. கலவரக்காரர்களையும் கொள்ளையர்களையும் நாம் விரும்பவில்லை. துரியோதனன், துச்சாதனன் போன்றோர் நமக்கு வேண்டாம்," என்றார்.
முதல்வர் மம்தாவுக்கு முன்பு மிகவும் நெருக்கமாக இருந்த சுவேந்து அதிகாரி, திரிணாமூல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்துள்ளார். நந்திகிராம் தொகுதியில் அவர் மம்தாவை எதிர்த்துப் போட்டியிடுகிறார். அவரை கண்மூடித்தனமாக தாம் நம்பியதாகவும் அவர் தனக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும் மம்தா புகார் கூறினார்.

