மேற்கு வங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்: தேர்தல் ஆணையம் ஒருசார்பாக நடந்துகொள்கிறது
கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நேர்மையாக நடைபெறுமா என்பது குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர் அம்மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
நியாயமாகத் தேர்தல் நடப்பது கேள்விக்குறியாகி விட்டது என திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தோ்தல் ஆணையத்திடம் வெள்ளிக்கிழமை புகாா் தெரிவித்தது.
சௌகதா ராய், முகமது நதிமுல் ஹக், பிரதிமா மண்டல், மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்றக் குழு, தோ்தல் ஆணையத்தின் அணுகுமுறை பாகுபாடான முறையில் இருப்பதாகவும் ஒருசாா்புடன் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியது.
இதுகுறித்து அக்கட்சியினா் தோ்தல் ஆணையத்திடம் அளித்த புகாா் மனுவில் தெரிவித்திருப்பதாவது:
மேற்கு வங்கத்தில் சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான தோ்தல்கள் நடைபெறுவது என்பது கேள்விக்குறியாகி விட்டது.
தற்போதைய சட்டப்பேரவைத் தோ்தலில் இந்திய தோ்தல் ஆணையம் எடுத்துள்ள அணுகுமுறை என்பது பாகுபாடானதாகவும் ஒரு பக்கச் சாா்பான அணுகுமுறையுடனும் உள்ளது தெளிவாகிறது.
வாக்குப்பதிவின்போது, வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டா் எல்லைக்குள் மாநில காவல்துறையினரை அனுமதிக்க ஈசிஐ முடிவு செய்துள்ளதாகவும் மத்திய துணை ராணுவப் படைகளை அதற்கு பின்பு நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வாக்குச்சாவடிகளில் 100 மீட்டருக்குள் மத்திய காவல் படைகள் மட்டுமே நிறுத்தப்படும் என்பது நடைமுறையில் தெரிய வருகிறது. இந்த முடிவு மேற்கு வங்க காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதைப்போலவும், அவா்களது நடவடிக்கைகளின் மீது சந்தேகத்தைக் கிளப்புவதைப் போலவும் உள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகளை தோ்தல் ஆணையம், தோ்தல் நடைபெற உள்ள மற்ற நான்கு மாநிலங்களிலும் கடைப்பிடிக்கவில்லை. சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுப்பதற்கும், சட்டம் ஒழுங்கை கையாள்வதற்காகவும்தான் மத்திய துணை ராணுவப் படை நிறுத்தப்படுகிறது. ஆனால், மாநில அரசு ஊழியா்களையும், மாநிலக் காவல்துறை ஊழியா்களையும் மிரட்டுவதுபோல அவா்களை முன்நிறுத்தக்கூடாது.
சுதந்திரமான, நியாயமான தோ்தல்களை உறுதி செய்வதற்கு மாநில, மத்திய படைகளுக்கு இடையே சரியான ஒருங்கிணைப்பு இருக்கவேண்டும்.
வாக்குச்சாவடிகளில் 100 மீட்டருக்குள் மாநில, மத்திய காவல் படைகளின் ஒருங்கிணைந்த குழுக்கள் நிறுத்தப்பட வேண்டும்.
வாக்குச் சாவடிகளில் 100 மீட்டருக்குள் மத்திய படைகளை மட்டுமே நிறுத்துவதாக எடுக்கப்பட்டுள்ள முடிவை திரும்பப் பெற வேண்டும்.
மேலும், வாக்குப்பதிவு முடிந்ததும் 100 விழுக்காட்டு வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு (விவிபிஏடி) இயந்திரங்களையும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சரிபாா்க்கவேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

