புதுடெல்லி: கொரோனா பெருந்தொற்றால் இந்தியாவில் வறுமை இரட்டிப்பாகியுள்ளதாகவும் அதேவேளையில் சீனாவில் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அனைத்துலக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
'பியூ' ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.
நோய்த்தொற்றால் இந்தியப் பொருளாதாரத்தின் மீது ஏற்பட்ட தாக்கம் குறித்து உலக வங்கி தயாரித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த வியாழக்கிழமையன்று இந்த அறிக்கை வெளியானது.
இந்திய மக்கள் தொகையில் பெரும்பான்மை மக்கள் தொகை அன்றாடம் ரூ.150 முதல் ரூ.700 வரை வருமானம் ஈட்டும் பிரிவுக்குச் சரிந்துள்ளது.
குறிப்பாக அன்றாடம் ரூ.150க்கும் கீழ் ஊதியம் ஈட்டும் மக்களின் எண்ணிக்கை 7.5 கோடியாக அதிகரித்துள்ளது.
நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளதே இதற்குச் சான்று என்று பியூ ஆய்வு மையம் கூறுகின்றது.
இந்நிலையில் சீனாவில் நடுத்தர வர்க்கத்தினரின் சரிவு வெறும் 1 கோடி என்றளவிலேயே இருக்கிறது.
ஏழை மக்களின் எண்ணிக்கை 10 லட்சம் மட்டுமே அதிகரித்துள்ளது என அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்தது.

