திருவனந்தபுரம்: கேரளாவிலும் மேற்கு வங்கத்திலும் ஆட்சியைப் பிடிக்க அரசியல் கட்சிகள் பெண்களைக் கவரும் விதமாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன.
காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் பெண்களுக்குப் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் ஒட்டுமொத்த வாக்காளர்களில் ஆண்களைவிட 8.27 லட்சம் பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர். எனவேதான் அனைத்து அரசியல் கட்சிகளும் பெண்களின் ஆதரவைப் பெறுவதில் ஆர்வம் காட்டுகின்றன.
கேரளத்தில் மார்க்சிஸ்ட் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாக அண்மைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. எனினும் அம்மாநில பெண்களைக் கவர்ந்திழுப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முனைப்பாக உள்ளது.
விலையில்லா மளிகைப் பொருள் வினியோகம் நீடிக்கும், முதியோர், கைம்பெண்களுக்கான ஓய்வூதியம் ரூ.2,500-ஆக அதிகரிக்கப்படும், இல்லத்தரசிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட வாக்குறுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியும் தன் பங்குக்கு பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அரசுப்போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தாய்மார்களுக்கு இரண்டு ஆண்டுகள் வயதுத் தளர்வு, நியாய் திட்டத்தின் கீழ் வரும் பெண்களுக்கு மாதம்தோறும் 6,000 ரூபாய் ஓய்வூதியம், அத்திட்டத்தின் கீழ் வராத 40 முதல் 60 வயதுக்குட்பட்ட அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் 2000 ரூபாய், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஐந்து கிலோ இலவச அரிசி என பல வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது காங்கிரஸ் கட்சி.
இதன் மூலம் தேர்தலில் வெற்றிபெற தமிழக அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் வியூகத்தையே கேரள அரசியல் தலைவர்களும் பின்பற்றுவதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
மேற்கு வங்க மாநிலத் தேர்தல் களத்திலும் இதே பாணி பின்பற்றப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அங்கு பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மத்திய அமைச்சர் அமித் ஷா, பட்டமேற்படிப்பு வரை பெண்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என அறிவித்தார்.
பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தொடக்கக் கல்வி முதலே பெண் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

