மும்பை: மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மாதந்தோறும் நூறு கோடி ரூபாய் லஞ்சம் வசூலித்து தருமாறு மும்பை காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டதாக வெளியான தகவல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தி உள்ளார்.
மகாராஷ்டிராவில் முறையாக ஆட்சி செய்வதற்காக அல்லாமல் கொள்ளையடிக்கவே சில தரப்பினர் கூட்டணி அமைத்துள்ளதாக அவர் சாடியுள்ளார்.
லஞ்சம் வசூலித்து தருமாறு மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் தமக்கு உத்தரவிட்டதாக மும்பை முன்னாள் காவல் ஆணையர் பரம்பீர் சிங் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.
அண்மையில்தான் அவர் காவல் ஆணையர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். உள்துறை அமைச்சரின் உத்தரவைச் செயல்படுத்தாததால் தம் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளதாக பரம்பீர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அவர் எழுதியுள்ள கடிதம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து வெளி அமைப்புகளைக் கொண்டு நேர்மையான, பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தி உள்ளார். இல்லையெனில் பாஜகவினர் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துவர் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

