புதுடெல்லி: கொவிட்-19 ஊரடங்கு காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலம் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்ட நிலையில், அந்தக் காலகட்டத்தில் ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டி வசூலித்திருந்தால் அதை வாடிக்கையாளர்களுக்குத் திருப்பித் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா ஊடரங்கு காலத்தில் அடிப்படைப் பொருளியல் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வீட்டுக்கடனுக்கான தவணையை ஆறு மாதங்களுக்குக் காலந்தாழ்த்திச் செலுத்த சலுகை வழங்கப்பட்டிருந்தது. ஆனால், பல வங்கிகள், தவணைத் தொகை கட்டாததினால் கடன் தொகைக்கான வட்டிக்கு வட்டி விதித்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடையச் செய்தன. இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
"கொரோனா காலத்தில் ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கத் தடை விதிக்கிறோம். அந்தக் காலகட்டத்தில் ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டி வசூலித்திருந்தால் அப்படி வசூலித்த பணம் வாடிக்கையாளர்களுக்குத் திருப்பி தரப்பட வேண்டும். அதே நேரத்தில், கடன்களுக்கான வட்டியை முழுமையாகத் தள்ளுபடி செய்ய இயலாது," என்று நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், கொரோனா கால வங்கிக்கடன் தவணை சலுகையை 6 மாதத்திற்கு மேல் நீட்டிக்க முடியாது என்றும், வட்டி தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் கொள்கையில் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கு காலத்தில் இருந்து இப்போதுதான் பல தொழில்கள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் வெளியாகியுள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, சொத்துச் சந்தை உள்ளிட்ட தொழில்துறை நிறுவனங்களை பெரும் ஏமாற்றத்திற்குள்ளாக்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

