புதுடெல்லி: இந்தியாவில் கிருமித்தொற்று பெருகி முடக்கநிலை அறிவிக்கப்பட்ட நேரத்தில் பணப் பிரச்சினைதான் பெரிய அளவில் மன அழுத்தத்தைத் தந்ததாக நான்கில் ஒரு குழந்தை கூறியுள்ளது.
'சைல்ட் ரைட்ஸ் அண்ட் யூ (சிஆர்ஒய்)', 'டாடா இன்ஸ்ட்டியூட் ஆஃப் சோசியல் சைன்ஸ் (டிஐஎஸ்எஸ்)' ஆகியன இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தின.
'தொற்றின்போது குழந்தைகளின் அனுபவங்களைப் புரிந்துகொள்வது: மனஅழுத்தம், மீள்திறன், ஆதரவு மற்றும் அரவணைப்பு' எனும் தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில் ஊரடங்கு காலத்தில் அனுபவித்த மன அழுத்தம், வேதனைகள், சிக்கல்கள் போன்றவை குறித்து குழந்தைகளிடமும் பதின்ம வயதினரிடமும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
நாடு முழுவதும் 13 நகரங்களைச் சேர்ந்த 9 வயது முதல் 17 வயது வரையிலான 821 குழந்தைகள் ஆய்வில் பங்கேற்றனர். இவர்களில் சிறுவர்கள் 470 பேர், சிறுமியர் 351 பேர்.
இவர்களில் பாதிப் பேர் (48.7%) தங்களின் அன்றாட வாழ்க்கை முறையின் பெரும்பகுதி மாறிவிட்டது என்றும் சிறிதளவுதான் மாறியுள்ளது என 50 விழுக்காட்டினரும் தெரிவித்துள்ளனர்.
வாழ்க்கைமுறை மாறியது தங்களுக்குக் கவலையளிப்பதாக 41.9 விழுக்காட்டினரும் சலித்துப்போய்விட்டதாக 45.2 விழுக்காட்டினரும் கூறினர்.
நான்கில் ஒரு சிறார் (26%) ஊரடங்கு காலத்தில் கடுமையான பணப் பிரச்சினையை தங்களது குடும்பம் சந்தித்ததாகத் தெரிவித்தனர்.
கிருமித்தொற்றால் எழுந்த பிரச்சினைகள் எப்போது முடியும் எனத் தெரியாது என்று 24 விழுக்காட்டினரும் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோம் என அஞ்சுவதாக 23.5 விழுக்காட்டினரும் தெரிவித்துள்ளனர்
தங்கள் தாய், தந்தையின் வேலை குறித்தும் தங்களின் கல்வி கற்கும் நிலை குறித்தும் பெரும் மன அழுத்தத்தில் இருந்ததாக 44.9% குழந்தைகள் தெரிவித்தனர்.
இதில் 43.3% சிறுமிகளும் 46.9% சிறுவர்களும் இந்தக் கருத்தைத் தெரிவித்தனர்.
தொற்றுப் பரவல் காலத்தில் மன அழுத்தம், இதரப் பிரச்சினைகளின்போது குடும்பத்தில் அதிகமான ஆதரவு அம்மாவிடமிருந்து வந்தது என 59.3 விழுக்காட்டினர் கூறினார்.
தந்தையிடம் இருந்து ஆதரவு கிடைத்ததாக 45.9 விழுக்காட்டினரும் உறவினர்களிடம் இருந்து ஆதரவு வந்ததாக 13.2 விழுக்காட்டினரும் தெரிவித்தனர்.
முடக்கத்தின்போது பணப் பிரச்சினையே பெரிதும் வாட்டின: ஆய்வு

