புதுடெல்லி: இந்தியா முழுவதும் பரவியுள்ள மொத்த கிருமித்தொற்றில் 77 விழுக்காடு ஐந்து மாநிலங்களில் மட்டுமே பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 24 மணிநேரத்தில் புதிதாக 47,262 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப் பட்டது. மேலும் புதிதாக 275 பேர் மாண்டுவிட்டனர்.
மொத்த தொற்று எண்ணிக்கையில் 77% மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், சத்தீஸ்கர், குஜராத் ஆகிய மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 28,699 பேருக்கும் பஞ்சாபில் 2,254 பேருக்கும் கர்நாடகத்தில் 2,010 பேருக்கும் செவ்வாய்க்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் திருப்பதியில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்தத் தடை வரும் 28ஆம் தேதி தெப்ப உற்சவம் முடியும் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானப் பயண தடை நீட்டிப்பு
மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதன் காரணமாக அனைத்துலக விமானப் பயணங்களுக்கான தடை ஏப்ரல் 30ஆம் தேதி வரை தொடரும் என மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.

