புவனேஸ்வர்: ஓடும் ரயிலில் கன்னியாஸ்திரிகளைத் துன்புறுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கடந்த 19ஆம் தேதி ஹரித்துவாரில் இருந்து ஒடிசா மாநிலம் நோக்கிச் சென்ற ரயிலில் இரு கன்னியாஸ்திரிகளும் மேலும் இரு பெண்களும் பயணம் மேற்கொண்டனர்.
அப்போது சக பயணிகளில் சிலர் கன்னியாஸ்திரிகள் இருவரும் மதமாற்றம் செய்வதற்காக மற்ற இரு பெண்களை அழைத்துச் செல்வதாக சந்தேகமடைந்தனர்.
இதையடுத்து சிலர் அவ்விரு கன்னியாஸ்திரிகளைச் சூழ்ந்து கொண்டு துன்புறுத்தியதுடன் சரமாரியாக பல கேள்விகளை எழுப்பினர். மேலும் நான்கு பேரையும் ரயிலில் இருந்து இறங்கும்படியும் கட்டாயப்படுத்தினர்.
இந்நிலையில் அதிகாரிகள் நடத்திய விசாரணைக்குப் பிறகு மதமாற்ற முயற்சிகள் ஏதும் நடக்கவில்லை என்று உறுதியானதை அடுத்து கன்னியாஸ்திரிகள் உள்ளிட்ட நால்வரும் தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பான காணொளிப் பதிவு ஒன்று சில நாள்களாக இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் கன்னியாஸ்திரிகளைத் துன்புறுத்தியதாக ஒருதரப்பினர் சாடியுள்ளனர். இதையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் இச்செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நட வடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

