புதுடெல்லி: விரைவில் நடைபெற உள்ள ஐந்து மாநில தேர்தலில் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க இயலாது என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
மக்களவையில் நேற்று முன்தினம் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் இத்தகவலைக் குறிப்பிட்டார்.
வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க வசதியாக தேர்தல் நடத்தை விதிமுறைகளில் திருத்தம் செய்ய வேண்டும் எனும் கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்து வருகிறது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சுடன் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில் ஐந்து மாநிலத் தேர்தலில் வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்களா எனும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
எனினும் தற்போதுள்ள சூழ்நிலையில் வாக்களிப்பதற்கான வசதியை ஏற்படுத்தித் தர இயலாது என மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது.

