டெல்லியில் பதற்றமான பகுதிகளில் போலிஸ் குவிப்பு
புதுடெல்லி: மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறக்கோரி இன்று காலை தொடங்கிய முழு அடைப்புப் போராட்டத்தால் டெல்லி, பஞ்சாப், ஹரியானாவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
2020 செப்டம்பரில் மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது.
இந்த சட்டங்கள் விவசாயிகளுக்குக் கேடுவிளைவிக்கக்கூடியவை எனவும் அவற்றை உடனடியாக மீட்டுக்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசுக்கும் விவசாய சங்கங்களுக்கும் இடையே பத்து சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
கடந்த டிசம்பர் 8ஆம் தேதி விவசாய சங்கங்கள் சார்பில் நாடு முழுதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. கடந்த ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின நாளில் டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது பெரும் வன்முறை ஏற்பட்டது. இருந்தும் விவசாயிகள் தங்களது குறிக்கோளில் இருந்து பின்வாங்காமல் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் நேற்று காலையிலேயே போராட்டம் தொடங்கியது.
மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் குந்தியிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்துகள், வாடகை உந்துவண்டிகள் போன்ற பொதுப்போக்குவரத்து வாகனங்கள் இயங்கவில்லை. பஞ்சாப்பில் மட்டும் 120 இடங்களில் மறியல் நடைபெற்றுவருகிறது.
தலைநகர் டெல்லியில், காசிபூர் எல்லையில் தேசிய நெடுஞ்சாலை 24ஐ போலிசார் மூடிவிட்டனர். இந்த எல்லையில், விவசாயிகள் தொடர்ந்து நான்கு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காசிபூர் எல்லை மூடப்பட்டதால் மாற்றுப் பாதையில் வாகனங்கள் சென்றுவந்தன. ஆனால், இன்றைய முழுஅடைப்பை ஒட்டி விவசாயிகள் அந்தப் பாதையையும் மூடினர்.
இந்நிலையில் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் காரணமாக அங்குள்ள ஐந்து பகுதிகளை பதற்றமான பகுதிகள் என போலிஸ் தலைமை அறிவித்துள்ளது. அத்துடன் அங்கு வன்முறை ஏதும் நிகழாமல் பாதுகாக்கும் வகையில் அப்பகுதிகளில் ஏராளமான போலிசார் குவிக்கப்பட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன.

