புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் 'மனதின் குரல்' (மான் கி பாத்) என்னும் தலைப்பில் வானொலி உரை நிகழ்த்தி வருகிறார். அந்நிகழ்வின் 75வது ஞாயிற்றுக்கிழமையில் நேற்று உரை நிகழ்த்திய மோடி தமிழகம் தொடர்பான பல அம்சங்களைப் பாராட்டினார்.
மோடி பேசுகையில், "கோயம்புத்தூரைச் சேர்ந்த பேருந்து நடத்து நர் மாரிமுத்து யோகநாதன் பயணிகளுக்கு பயணச் சீட்டுடன் சேர்த்து இலவசமாக மரக்கன்றை யும் வழங்கி வருகிறார். அவர் தனது வருமானத்தில் பெரும் பகுதியை இதற்காக செலவிடுவது ஆச்சரிய மாக இருக்கிறது. மாரிமுத்து யோகநாதனுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
"அவரது முயற்சிக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள் கிறேன்.
"அண்மையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் 10 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்தார். அவரது சாதனைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பெண்கள் தினம் கொண்டாடப்படும் மார்ச் மாதத்தில் விளையாட்டுத்துறையில் நிறைய வீராங்கனைகள் பல்வேறு விருதுகளையும் சாதனைகளையும் படைத்துள்ளனர். டெல்லியில் நடந்த உலக துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்தியா முதல் நிலையைப் பெற்றுள்ளது. தங்கம் பெற்ற நாடுகள் வரிசையில் இந்தியா முன்னிலையில் உள்ளது," என்றார் மோடி.
தமிழகத்தில் பல்லவர்களின் திறமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் மாமல்லபுரத்தைப் பற்றி பிரதமர் மோடி பேசினார்.
"பழமையான மாமல்லபுரம் தமிழக கலாசாரத்தை எடுத்துரைக்கிறது. அதேபோல சென்னை கலங்கரை விளக்கத்தை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும். சென்னையில் இருப்பதுதான் இந்தியாவிலேயே தனித்துவம் மிக்க கலங்கரை விளக்கம்," என்று அவர் கூறினார்.

