புதுடெல்லி: டெல்லியில் கடந்த 1991ஆம் ஆண்டு வீட்டில் தீக்காயம் அடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் இறந்தார். அந்தப் பெண்ணின் சகோதரர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பெண்ணின் கணவரையும் நாத்தனாரையும் போலிசார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை முடிவில், "இறந்த பெண் அளித்த மரண வாக்குமூலத்தில், தான் தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிவித்துள்ளார்," எனக் கூறி இருவரையும் விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்தது.
இதை எதிர்த்து பெண்ணின் சகோதரர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்தார். அவரது மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் நவீன் சின்ஹா, கிருஷ்ணா முராரி ஆகியோர் இறுதி யாகத் தீர்ப்பு கூறினர்.
"இறக்கும் தறுவாயில் ஒருவர் அளிக்கும் வாக்குமூலம் வழக்கில் முக்கிய ஆவணமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
"ஆனால், மரண வாக்கு
மூலத்தை ஏற்கவோ நிராகரிக்கவோ சரியான அளவுகோல்கள் இல்லை. மரண வாக்குமூலம் அளிக்கும் நபர் தாமாக முன்வந்து அளித்துள்ளாரா அல்லது நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் அளித்தாரா என்பது நிரூபிக்கப்பட வேண்டும்.
"இதில் சந்தேகம் ஏற்பட்டால் அதன் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சாதகமாகக் கருதவேண்டும். அதனால், மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது," என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

