வாரணாசி: நடுவானில் பயணி ஒருவர் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்றதால் சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
விமானப் பணிப்பெண்களும் பயணிகளும் சேர்ந்து அவரை தடுத்து நிறுத்தினர்.
தனியார் விமானம் ஒன்று நேற்று முன்தினம் வாரணாசியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது கவுரவ் என்ற பயணி திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று அவசரகால கதவை திறக்க முயன்றார். அதைக் கண்டு விமானப் பணிப்பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விமானிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் பயணிகள் சிலரது உதவியுடன் அந்த ஆடவரை மடக்கிப் பிடித்து அவரது இருக்கையில் அமர வைத்தனர். விமானம் தரையிறங்கும் வரை அவர் இருக்கையை விட்டு நகர அனுமதிக்கப்படவில்லை.
சில நிமிடங்களில் விமானம் பத்திரமாக தரையிறங்கியதை அடுத்து கவுரவ் விமான நிலைய பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அந்த விமானத்தில் 89 பயணிகள் இருந்ததாகவும் விமானம் புறப்பட்டது முதல் அந்த ஆடவர் இருக்கையில் அமராமல் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தார் என்றும் விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

