இம்பால்: மியன்மாரில் இருந்து இந்திய எல்லை வழியே மணிப்பூர் மாநிலத்துக்குள் நுழைய முற்படுபவர்களை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் என அதிகாரிகளுக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக மியன்மாரில் இருந்து இந்திய எல்லைக்குள் தஞ்சம் புகும் நோக்கத்துடன் வருபவர்களை அமைதியான முறையில் பேசி திருப்பி அனுப்ப வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது.
ராணுவப் புரட்சிக்குப் பிறகு மியன்மாரில் கொந்தளிப்பான சூழ்நிலை காணப்படுகிறது. இதையடுத்து ஏராளமானோர் அங்கிருந்து வெளியேறி இந்திய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மணிப்பூர் மாநிலத்துக்குள் தஞ்சம் புகத்தொடங்கியுள்ளனர்.
இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட மியன்மார் குடிமக்கள் மணிப்பூருக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. இதனால் அகதிகளாக வருவோரை திருப்பி அனுப்புமாறு கடந்த 26ஆம் தேதி எல்லையோர மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு மணிப்பூர் அரசு உத்தரவிட்டதாக ஒரு தகவல் வெளியானது.
ஆனால் திங்கட்கிழமையன்று அதிகாரிகளுக்கு அனுப்பிய மற்றொரு கடிதத்தில் தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, மியன்மார் குடிமக்களை மனிதாபிமானத்துடன் நடத்த மணிப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
காயமடைந்த மியன்மார் குடிமக்களை தலைநகர் இம்பாலுக்கு அனுப்பி சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எல்லையோர மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

