கோல்கத்தா: நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில் தான் வெற்றி பெற உதவும்படி பிரலாய் பால் எனும் பாஜக தலைவரிடம் பேசியது உண்மைதான் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஒப்புக்கொண்டுள்ளார்.
இரு நாள்களுக்குமுன் அது தொடர்பான ஒலிப்பதிவு வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், "ஆமாம், நான் அவரிடம் பேசியது உண்மைதான். யாரோ ஒருவர் என்னிடம் பேச விரும்புவதாக என்னிடம் கூறப்பட்டது. ஆகையால், அவரது எண்ணைப் பெற்று பேசினேன். உடல்நிலையைக் கவனித்துக்கொள்ளும்படி அவரிடம் கூறினேன். இதில் என்ன குற்றம் இருக்கிறது?
"ஒரு தொகுதியின் வேட்பாளராக, என்னை வெற்றிபெறச் செய்ய உதவும்படி அங்குள்ள எந்த ஒரு வாக்காளரையும் நான் கேட்க முடியும். அதற்கு எனக்கு உரிமை இருக்கிறது," என்று முதல்வர் மம்தா விளக்கமளித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் எட்டுக் கட்டங்களாக வாக்குப்பதிவு இடம்பெறும் நிலையில், இரண்டாம் கட்டமாக நந்திகிராம் உள்ளிட்ட 30 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

