கோல்கத்தா: நடப்பு சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 200 தொகுதிகளுக்கும் மேல் கைப்பற்றும் என அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஹூக்ளி மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், மேற்கு வங்க தேர்தலில் தம்மால் ஒற்றைக் காலில் நின்று வெற்றிபெற முடியும் என்றார்.
மேலும், எதிர்காலத்தில் இரு கால்கள் கொண்டு டெல்லியிலும் தம்மால் வெற்றிபெற முடியும் என அவர் சூளுரைத்தார்.
"இம்முறை நந்திகிராம் தொகுதியில் நான் வெற்றி பெறுவேன். ஆனால் இந்தத் தேர்தல் என்னை பற்றியது மட்டுமல்ல, மாறாக திரிணாமுல் காங்கிரஸ் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவதற்கான உறுதியை நீங்கள் அளிக்க வேண்டும்.
"இல்லையென்றால் பாஜகவினர் பணபலத்தை வைத்து துரோகிகளை விலைக்கு வாங்கிவிடுவார்கள்," என்றார் முதல்வர் மம்தா.
நாடு முழுவதும் கொரோனா கிருமித்தொற்றின் இரண்டாவது அலை வேகமெடுத்து வரும் நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவதை ஏற்க இயலாது என்று குறிப்பிட்ட அவர், ஏன் குறுகிய காலத்துக்குள் தேர்தலை நடத்தி முடித்திருக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பினார்.
"மேற்கு வங்காள தேர்தலில் நிறுத்துவதற்கு பாஜகவில் உள்ளூர் தலைவர்கள் யாரும் இல்லை. அவர்களது வேட்பாளர்கள் அனைவரும் திரிணாமுல் காங்கிரஸ் அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரிடம் இருந்து வாங்கப்பட்டவர்கள். காலில் காயம் ஏற்பட்ட நிலையிலும் இந்த தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது," என்று முதல்வர் மம்தா மேலும் தெரிவித்தார்.