புதுடெல்லி: கொவிட்-19 காரணமாக முடங்கிக் கிடக்கும் விமானப் போக்குவரத்து தொழில்துறையை உசுப்பிவிடும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்திய அரசாங்கம் பல்வேறு நாடுகளுடன் இரு தரப்பு விமானப் போக்குவரத்து உடன்பாடுகளைச் செய்துகொண்டுள்ளது.
இதுவரையில் மொத்தம் 28 நாடுகளுக்குப் பயணிகள் பறந்து செல்ல முடியும் என்று இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்தத் தற்காலிக இரு தரப்பு ஏற்பாட்டின்படி இந்தியா மற்றும் 28 நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்கள், பல்வேறு கட்டுப்பாடுகள், நிபந்தனைகளுடன் விமானச் சேவைகளை நடத்த முடியும்.
இந்தப் பட்டியலில் புதிதாக இலங்கை சேர்க்கப்பட்டு இருப்பதாக இந்தியாவின் விமானப் போக்குவரத்து அமைச்சு நேற்று தெரிவித்தது. இதன்படி இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சிறப்பு அனைத்துலக விமானங்கள் விரைவில் தொடங்கும் என்றும் அந்த அமைச்சு கூறியது.
இலங்கையையும் சேர்த்து சார்க் எனப்படும் தெற்கு ஆசிய நாடுகள் அமைப்பில் இத்தகைய ஆறு உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
கொவிட்-19 காரணமாக அனைத்துலக விமானச் சேவைகளை 2020 மார்ச் 23 முதல் இந்தியா நிறுத்திவைத்து இருக்கிறது.
இருந்தாலும் விமானப் போக்குவரத்து தொழில்துறைக்கு ஊக்கமூட்டும் நோக்கத்துடன் அது பல்வேறு நாடுகளுடன் இரு தரப்பு தற்காலிக விமானப் பயண ஏற்பாடுகளைச் செய்துகொண்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், பங்ளாதேஷ், பூட்டான், கனடா, எத்தியோப்பியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஈராக், ஜப்பான், கென்யா, குவைத், மாலத்தீவு, நேப்பாளம், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், கத்தார், ரஷ்யா, ருவாண்டா, சீசெல்ஸ், இலங்கை, தான்சானியா, உக்ரைன், ஐக்கிய அரபு சிற்றரசுகள், பிரிட்டன், அமெரிக்கா, உஸ்பெக்கிஸ்தான் ஆகியவை அந்த நாடுகள்.
இவற்றுக்கு இடையில் இந்தியப் பயணிகள் விமானப் பயணங்களை மேற்கொள்ள முடியும்.
பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்காவுக்கு இடையில் இந்தியா ஏற்கெனவே தனிப்பட்ட முறையில் இரு தரப்பு விமானப் பயண ஏற்பாடுகளைச் செய்துகொண்டு இருக்கிறது. இதன்படி இந்த நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்கள், அனைத்துலக விமானச் சேவையை நடத்த முடியும்.
இது ஒருபுறம் இருக்க, கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் சிறப்பு அனைத்துலக விமானச் சேவைகள் இந்தியாவுக்கும் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த நகர்களுக்கும் இடையில் இப்போது நடந்து வருகின்றன.
இருதரப்பு உடன்பாட்டில் இலங்கையும் இணைப்பு; விரைவில் விமானச் சேவை தொடங்கும்

