சண்டிகர்: இந்திய அரசாங்கம், தான் நிறைவேற்றிய புதிய மூன்று வேளாண் சட்டங்களை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி புதுடெல்லியில் பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் நான்கு மாதங்களுக்கும் மேலாக போராடி வருகிறார்கள்.
மத்திய அரசாங்கம் இதுவரையில் அவர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்கவில்லை என்பதால் போராட்டத்தை விவசாயிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக புதுடெல்லியிலிருந்து ஹரியானாவுக்குச் செல்லும் விரைவுச்சாலையில் சனிக்கிழமை விவசாயிகள் நடத்திய மாபெரும் மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பயணிகள் பெரும் சங்கடங்களுக்கு ஆளானார்கள்.
136 கி.மீ. நீளமுள்ள அந்த ஆறு வழி விரைவுச்சாலையில் புதுடெல்லியில் இருந்து அன்றாடம் 50,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் திருப்பிவிடப்படுகின்றன.
அந்தச் சாலையின் குறுக்கே டிராக்டர், வாகனங்களை நிறுத்தி விவசாயிகள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து தடைபட்டது.
நேற்றுக் காலை 8 மணி வரை மறியல் தொடரும் என்று அறிவிக்கப்பட்டதால் பயணிகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அந்த நெடுஞ்சாலையைத் தவிர்த்துக்கொள்ளும்படி போலிசார் ஆலோசனை கூறியதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
இவ்வேளையில், விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைவதைக் கருத்தில்கொண்டு அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மீண்டும் அழைப்பு விடுத்தார்.
எல்லா பிரச்சினைகளுக்கும் பேசி தீர்வு காண மத்திய அரசு தயாராக இருப்பதாக அவர் கூறினார். இருந்தாலும் இந்திய நாடாளுமன்றம் சென்ற ஆண்டு நிறைவேற்றிய மூன்று வேளாண் மசோதாக்களால் எந்தவித பாதிப்பும் இல்லை என்று அவர் கூறினார்.
''பல விவசாய சங்கங்களும் பொருளியல் வல்லுநர்களும் வேளாண் மசோதாக்களை ஆதரிக்கிறார்கள். ஆனால் விவசாயிகளில் ஒரு பிரிவினர் அதை எதிர்க்கிறார்கள். அரசாங்கம் விவசாயிகளுடன் 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. தொடர்ந்து அவர்களுடன் பேசவும் அது தயாராக இருக்கிறது,'' என்று அமைச்சர் கூறியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

