ஒரே நாளில் 168,912 பேர் புதிதாக பாதிப்பு; ரஷ்ய தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி
புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் சுமார் 4 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், புதிய தொற்றுச் சம்பவங்களும் ஒரே நாளில் 168,912ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஒருவார காலமாக அன்றாடம் புதிதாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது.
இதனால் ஒட்டுமொத்த பாதிப்பு 13.50 மில்லியனைக் கடந்துள்ளது என்றும் மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழகம், சத்தீஸ்கர், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் தொற்றுப்பரவலின் வேகம் அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிராவில் அதிக அளவாக ஒரே நாளில் 63,294 பேரும் டெல்லியில் 10,774 பேரும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் 904 பேர் பலியாகிவிட்டனர்.
மும்பையில் சுமார் 600,000க்கும் அதிகமானோர் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
நாடு முழுவதும் கொவிட்-19 பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 1.20 மில்லியனாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, பெங்களூருவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக முதல்வர் எடியூரப்பா எச்சரித்துள்ளார்.
நேற்று முன்தினம் ஒரே நாளில் புதிதாக 9,579 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த சனிக்கிழமை முதல் பெங்களூரு, மைசூரு, மங்களூரு உள்ளிட்ட எட்டு நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஷ்ய தயாரிப்பான 'ஸ்புட்னிக் வி' கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அவசர காலப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து நாட்டில் தற்போது மூன்றாவது தடுப்பூசி பயன்பாட்டுக்கு வர உள்ளது.