திருவனந்தபுரம்: தமது பதவியையும் அதிகாரத்தையும் நெருக்கமானவர்களுக்காக தவறாகப் பயன்படுத்தி உள்ளார் என்று லோக் ஆயுக்தா நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து கேரள உயர்கல்வி அமைச்சர் கே.டி.ஜலீல் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இது தொடர்பாக தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
தமது பதவி விலகல் முடிவானது தம்மை எதிர்ப்பவர்களுக்கு தற்காலிக நிம்மதி அளித்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேரள மாநில சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதிக்கழகத்தின் பொது மேலாளராக கே.டி.அதீப் என்பவரை நியமித்தார் கே.டி.ஜலீல். எனினும் அதீப் அமைச்சரின் உறவினர் என்பது பின்னர் தெரிய வந்தது.
இதையடுத்து தமது பதவியை அவர் முறைகேடாகப் பயன்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்தன.
இது தொடர்பாக லோக் ஆயுக்தாவில் அளிக்கப்பட்ட புகார் மீதான விசாரணையின் முடிவில் அமைச்சர் கே.டி.ஜலீல் தமது பதவியை தவறாகப் பயன்படுத்தியதாக தீப்பு அளிக்கப்பட்டது. இதனால் அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
அமைச்சர் ஜலீல் தமது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி இருப்பது உறுதியாகி உள்ளது என்றும் அவர் உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் லோக் ஆயுக்தா கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது.
மேலும் அமைச்சரின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்திருந்தது.
முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு கேரள தொழில்துறை அமைச்சர் ஜெயராஜனும் இதே போன்ற குற்றச்சாட்டுகளால் பதவி விலக நேர்ந்தது.