மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான லஞ்சப் புகார் குறித்து சிபிஐ விசாரிக்கும்படி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணையில் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் வழக்குப் பதியும்படி சிபிஐ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அனில் தேஷ்முக் மற்றும் மகாராஷ்டிரா அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, சிபிஐ விசாரணையைத் தொடங்கியது. விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அனில் தேஷ்முக்கிற்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. அதன்பேரில், நேற்று காலை மும்பை சான்டாகுரூஸ் பகுதியில் உள்ள டிஆர்டிஓ விருந்தினர் மாளிகையில் முன்னிலையான அனில் தேஷ்முக்கிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

