புதுடெல்லி: பல்வேறு விதமாக முயன்றும் சீனாவால் இந்தியாவுக்குச் சொந்தமான நிலத்தின் ஓர் அங்குலத்தைக் கூட கைப்பற்ற முடியவில்லை என ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் காணொளி வழி நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், சீனாவின் தந்திரங்கள் இந்தியாவிடம் பலிக்காது என்றார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைக் கோட்டை மாற்ற சீனா மிக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், எல்லையில் தள்ளுமுள்ளு தந்திரத்தை சீனா கையாண்டது என்றார்.
"இது எங்கள் வழி என்று சொல்லி யாருக்கும் வழிவிடக் கூடாது என்பதே சீனாவின் கொள்கையாக உள்ளது. அதேநேரம் இந்தியா உலக நாடுகளுடன் ஒன்றிணைந்து செயல்படுகிறது. அனைத்துலகச் சமூகம் இந்தியாவுக்குப் பக்கபலமாக நிற்கிறது," என்றார் பிபின் ராவத்.
சீனா இப்போது வேறு புதிய தந்திரங்களைக் கையாண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவின் வங்கிகள், மின் விநியோகம், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு ஆகியவற்றைச் சீர்குலைக்க அந்நாடு முயற்சி செய்து வருவதாகவும் சாடினார். எனினும் அனைத்து சவால்களையும் முறியடிக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது என்றார் தலைமைத் தளபதி.
"ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தன் படைகளை திரும்பப் பெறுவது அங்கு வெற்றிடத்தை ஏற்படுத்தும்.
"இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அந்நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்க சில நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதை உலக நாடுகள் தடுக்க வேண்டும்," என்றார் பிபின் ராவத்.

