கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மொத்தம் 45 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அப்பகுதிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் ஐந்து பேர் பலியாகி உள்ளனர்.
இதையடுத்து மீதம் இருந்த நான்கு கட்ட வாக்குப்பதிவுகளை ஒரே நாளில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.
தேர்தல் பிரசாரத்தால் மேற்கு வங்கத்தில் கொரோனா கிருமித்தொற்றுப் பரவல் அதிகரிப்பதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார். எனினும் அவரது கோரிக்கையை ஏற்க இயலாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மீதமுள்ள மூன்று கட்ட வாக்குப் பதிவுகளின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நேற்று தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.
இன்று தேர்தல் நடைபெற உள்ள 45 தொகுதிகளில் 319 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 1.12 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய உள்ளனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் கோல்கத்தாவில் நடைபெற்ற பிரம்மாண்டப் பேரணியில் முதல்வர் மம்தா கலந்து கொண்டார். சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்துக்கு சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே பேரணிக்குத் தலைமையேற்ற அவர், மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்காக தாம் பல்வேறு பயனுள்ள திட்டங்களைச் செயல்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டார்.

