புதுடெல்லி: உள்நாட்டில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கொவேக்சின் தடுப்பூசி உற்பத்தியை மாதந்தோறும் 10 கோடி (100 மில்லியன்) தடவை போடக்கூடிய அளவுக்கு உயர்த்த மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது.
தற்போதைய தடுப்பூசி உற்பத்தி மே-ஜூன் மாதங்களில் இரட்டிப்பாக்கப்படும் என்றும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் 6 முதல் 7 மடங்காக உற்பத்தி அதிகரிக்கப்படும் என்றும் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை தெரிவித்துள்ளது.
அதாவது, இந்த மாதம் 1 கோடியாக (10 மில்லியன்) இருக்கும் கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி, ஜூலை-ஆகஸ்ட் மாதத்தில் 6 (60 மி.) முதல் 7 கோடியாக (70 மி.) அதிகரிக்கப்படும். இது செப்டம்பரில் சுமார் 10 கோடியாக (100 மில்லியன்) அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் இந்தத் துறை நேற்று முன்தினம் கூறியது.
தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்காக சில வாரங்களுக்கு முன் இந்தியாவில் இரண்டு முக்கிய தடுப்பூசி உற்பத்தி மையங்களை மத்திய அமைச்சுகளுக்கு இடையேயான குழுக்கள் பார்வையிட்டன. அப்போது தடுப்பூசி தயாரிப்பாளர்களுடன் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.
உற்பத்தி அதிகரிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பங்களுடன் ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தின் உற்பத்தித்திறனும் இதர பொதுத்துறைத் தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்தித்திறனும் மேம்படுத்தப்பட உள்ளன.
பெங்களூரில் அமைக்கப்படும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் புதிய மையத்துக்கு சுமார் ரூ.65 கோடி மத்திய அரசு சார்பில் மானியமாக வழங்கப்படுகிறது. தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இந்த மையம் மாற்றியமைக்கப்படுகிறது. கொவேக்சின் உற்பத்தியை அதிகரிக்க மூன்று பொதுத்துறை நிறுவனங்களுக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது.
தடுப்பூசி தயாரிக்க மும்பையில் மகாராஷ்டிர அரசின்கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான ஹஃப்கைன் பயோஃபார்மசூட்டிகல்ஸ் நிறுவனத்திற்கு 65 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணியை மேற்கொள்ள 12 மாத கால அவகாசம் கேட்டது ஹஃப்கைன். ஆனால், ஆறு மாதங்களுக்குள் வேலைகளை முடித்து உற்பத்தியைத் தொடங்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த மையம் செயல்படத் தொடங்கும்போது மாதத்துக்கு 20 மில்லியன் தடவை போடுவதற்கான கொவேக்சின் தடுப்பூசிகளை தயாரிக்க முடியும்.

