மும்பை: கும்பமேளாவை முடித்து மும்பை திரும்பும் அனைவரையும் தனிமைப்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என மும்பை பெருநகர மேயர் கிஷோரி பெட்நேகர் (படம்) கூறியுள்ளார். தனிமைப்படுத்தப்பட்டால் அதற்கான செலவு முழுவதையும் அவர்களே ஏற்க வேண்டும் என்று நேற்று அவர் தெரிவித்தார்.
"உத்தரகாண்டின் ஹரித்துவாரில் நடைபெறும் கும்பமேளா விழா வை முடித்துக்கொண்டு அந்தந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்வோர் கொரோனா கிருமியை 'பிரசாத' மாக வழங்கிவிடக்கூடாது.
"குறிப்பாக, ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டு வரும் மகாராஷ்டிர மாநிலத்துக்கு அவர்கள் மூலம் கிருமி பரவி விடக்கூடாது.
"அவர்கள் அனைவரும் திரும்பிச்செல்லும் மாநிலங்களில் தனிமைப்படுத்தப்பட்டு அதற்கான செலவை அவர்களிடம் வசூலிக்க வேண்டும். மும்பையில் அவ்வாறு செய்வது பற்றி யோசித்து வரு
கிறோம்," என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கிஷோரி கூறினார்.
கங்கை ஆற்றின் கரைகளில் பல்லாயிரம் பக்தர்கள் ஒன்றுகூடி கும்பமேளாவைக் கொண்டாடி வருவது இந்தியாவில் கிருமிப் பரவல் வேகம் எடுத்திருப்பதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் மும்பையில் முழுமையான முடக்கம் அறிவிக்கப்பட வேண்டும் என்று மேயர் கிஷோரி கூறி உள்ளார். "95 விழுக்காடு மும்பை மக்கள் கொவிட்-19 விதிமுறைகளைப் பின்பற்றினாலும் எஞ்சிய 5 விழுக்காட்டினரால் மற்றவர்களுக்கு கிருமி பரவும் அபாயம் உள்ளது," என்றார் இவர்.

