முகக்கவசம் அணியாத ரயில் பயணிகளுக்கு ரூ.500 அபராதம்
புதுடெல்லி: மத்திய ரயில்வே துறை நேற்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில், "ரயில்களில் பயணம் செய்வோரும் ரயில் நிலையத்துக்குள் வரும் பயணிகளும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாமல் ரயில் நிலையத்துக்குள் வரும் பயணிகள், உடன் வருவோர் மற்றும் ரயிலில் பயணம் செய்வோருக்கு ரயில்வே சட்டத்தின் படி ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்," என தெரிவிக்கப் பட்டுள்ளது.
காசோலை மோசடி வழக்குகளை விசாரிக்க புதிய விதிகள்
புதுடெல்லி: காசோலை மோசடி வழக்குகளை விரைந்து விசாரிக்க புதிய விதிகளை உச்ச நீதிமன்றம் அறிவித்து உள்ளது. தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இதனை வெளியிட்டுள்ளது. "ஓராண்டுக்குள் ஒரே பணப் பரிமாற்றம் தொடர்பாக ஒரே நபருக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் காசோலை மோசடி வழக்குகள் அனைத்தையும் ஒரே வழக்காக விசாரிக்கும் வகையில் சட்டத்திருத்தம் இருக்கவேண்டும் என பரிந்துரைக்கிறோம். காசோலை மோசடி வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக அளிக்கப்படும் அழைப்பாணையை அவர் தொடர்புடைய அனைத்து காசோலை மோசடி வழக்குகளுக்குமான அழைப்பாணையாகக் கருதவேண்டும் என தெரிவித்து அதற்கான உத்தரவுகளை விசாரணை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றங்கள் பிறப்பிக்க வேண்டும்," என்று அமர்வு தெரிவித்து உள்ளது.
குமாரசாமிக்கு கொரோனா
பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சித் தலைவருமான குமாரசாமிக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "பரிசோதனை செய்ததில் எனக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. கடந்த சில நாட்களாக என்னுடன் நெருங்கிய தொடர்புகொண்ட அனைவருமே தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்," என பதிவிட்டுள்ளார்.
நிரவ் மோடி நாடுகடத்தலுக்கு இங்கிலாந்து பச்சைக்கொடி
புதுடெல்லி: மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி மோசடி செய்து வெளிநாடு தப்பிச் சென்று தலைமறைவான குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி கைது செய்யப்பட்டு தென்மேற்கு லண்டனில் உள்ள வான்ட்ஸ்வொா்த் சிறையில் அடைக்கப்பட்டாா். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி வருவதற்கான முயற்சிகளை அமலாக்கத் துறையும் சிபிஐயும் மேற்கொண்டுள்ளன. லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவை ஏற்று நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டிஷ் உள்துறை அமைச்சா் ஒப்புதல் அளித்துள்ளார். அதேவேளை நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து பிரிட்டிஷ் உச்ச நீதிமன்றத்தில் நிரவ் மோடி மேல்
முறையீடு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிணை: வீடு திரும்புகிறார் லாலு
புதுடெல்லி: மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவா் லாலு பிரசாத் யாதவுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் நேற்று பிணை வழங்கி உத்தரவிட்டது. லாலு மீது தொடரப்பட்ட நான்கு வழக்குகளில் மூன்றில் அவருக்கு ஏற்கனவே பிணை வழங்கப்பட்டுவிட்ட நிலையில் நேற்றைய பிணை மூலம் அவர் விடுதலையாகி வீடு திரும்ப வழி ஏற்பட்டுள்ளது. தற்போது அவா் உடல்நலக் குறைவால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விறுவிறுப்பான வாக்குப்பதிவு
கோல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு 45 தொகுதிகளில் நேற்றுக் காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை நடைபெற்றது. மாலை 4 மணி நிலவரப்படி 69.40 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. 294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. வரும் 22, 26, 29 தேதிகளில் இறுதி மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெறும்.

