புதுடெல்லி: இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பெறும் நோயாளிகள் பயன்பாட்டிற்கான உயிர்காக்கும் 'ரெம்டெசிவிர்' மருந்துக்கும் பல்வேறு மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் 'ரெம்டெசிவிர்' மருந்து சட்டவிரோதமாக அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றன.
இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் உள்ள புனே நகரின் பாரமதி பகுதியில் போலி 'ரெம்டெசிவிர்' மருந்தை விற்பனை செய்த நால்வரை போலிசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து கொரோனா சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் 'ரெம்டெசிவிர்' என்று பெயரிடப்பட்ட மூன்று ஊசி குப்பிகள் கைப்பற்றப்பட்டன.
ஆனால் உண்மையில் திரவ வடிவத்தில் பாரசிட்டமால் தவிர வேறு எதுவும் அதில் நிரப்பப்படவில்லை என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் போலி மருந்தை ஒரு குப்பிக்கு ரூ.35,000க்கு என விற்பனை செய்ததாக நம்பப்படுகிறது. அதன் அங்கீகரிக்கப்பட்ட சந்தை விலை ரூ. 1,100 ஆகும்.
"இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், மருந்து மற்றும் அழகு சாதனச் சட்டம் மற்றும் மருந்துகள் (விலைக் கட்டுப்பாடு) சட்டம் ஆகியவற்றின் கீழ் நான்கு பேரை நாங்கள் கைது செய்துள்ளோம்," என்று பாரமதி பிரிவு துணை போலிஸ் சூப்பிரிடென்டெண்ட் நாராயண் ஷிர்காவ்கர் குறிப்பிட்டார்.

