கோல்கத்தா: கொரோனா கிருமித்தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், கோல்கத்தாவில் மேற்கொள்ள இருந்த தேர்தல் பிரசாரத்தைக் கைவிடுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 26ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரசாரக் கூட்டத்தில் மட்டும் அவர் பங்கேற்க உள்ளதாக 'இந்துஸ்தான் டைம்ஸ்' நாளேடு குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக ராகுல் காந்தியும் தனது பிரசாரத்தை ரத்து செய்வதாக அறிவித்திருந்தார். மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை ஐந்து கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது.
இந்நிலையில், தொற்றுப் பரவல் அதிகரித்திருப்பதற்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என மம்தா வலியுறுத்தி உள்ளார்.
மேற்கு வங்கத்தில் அனைவருக்கும் இலவசமாக போடுவதற்கு 5.4 மில்லியன் கோடி டோஸ் தடுப்பூசிகளை அளிக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது என்றும் இது தொடர்பாக தமக்கு இன்னும் பதில் ஏதும் வரவில்லை என்றும் முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
"தற்போதைய நிலைமைக்கு பிரதமர்தான் காரணம். 2021ஆம் ஆண்டின் நிர்வாகத் திட்டமிடலுக்கு அவர் எதையும் செய்யவில்லை.நாட்டை நெருக்கடியான நிலைக்கு அவர் கொண்டு சென்றுள்ளார்," என்று மம்தா கூறியுள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடியையும் தம்மையும் வசைபாடுவதற்கே முதல்வர் மம்தா அதிக நேரம் செலவிடுகிறார் என தேர்தல் பிரசாரத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டி உள்ளார்.
மேற்கு வங்கத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வதற்கான திட்டம் முதல்வர் மம்தாவிடம் இல்லை என அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாஜகவின் பிரசார அலுவலகம் மீது சிலர் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கு சில மணி நேரம் பதற்றம் நிலவியது.

