புதுடெல்லி: கொரோனா தொற்று பாதிப்பு அபாய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரதமர் மோடி தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்பது விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' தெரிவித்துள்ளது.
கடந்த 17ஆம் தேதி மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பேரணியில் பங்கேற்றபோது பிரதமர் மோடி முகக்கவசம் அணிந்திருக்கவில்லை என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இதுபோன்ற பெரும் கூட்டத்தை நான் இதுவரை கண்டதில்லை. கொரோனா கிருமியை இந்தியா கடந்த ஆண்டு வென்றது. இந்தியா மீண்டும் வெற்றி பெற முடியும்," என்று பிரசாரக் கூட்டத்தில் பேசியபோது குறிப்பிட்டார் பிரதமர் மோடி.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் போதுமான அளவு ஆக்சிஜனும் ரெம்டெசிவிர் மருந்தும் இல்லை என்றும் இது குறித்து பிரதமரிடம் விவரம் தெரிவிக்க முடியவில்லை என்றும் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தேர்தல் கூட்டங்களில் பங்கேற்பதால் தம்முடன் பேச இயலவில்லை என தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பிற நாடுகளுக்கு மில்லியன் கணக்கான தடுப்பூசிகளை அனுப்பி வரும் நிலையில் உள்நாட்டில் 123 மில்லியன் தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இதுவரை 1.2 விழுக்காட்டினர் மட்டுமே இரண்டு முறை தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
பஞ்சாப்பில் நான்கு ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான விண்ணப்பங்களை தமது அரசு கடந்த ஆண்டே மத்திய அரசிடம் அளித்ததாகவும் இதுவரை அதற்கு அனுமதி கிடைக்கவில்லை என்றும் முதல்வர் அமரிந்தர் சிங் சாடியுள்ளார்.
இதற்கிடையே கொரோனா கிருமித்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு என மத்திய ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார் என்று செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசிடம் ஆக்சிஜன் வேண்டும் என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்திருப்பது அவரது வெட்கக்கேடான அரசியலை வெளிப்படுத்தி இருப்பதாகவும் அமைச்சர் பியுஷ் கோயல் கூறியுள்ளார்.
ஆக்சிஜன் தேவையை ஈடுகட்ட மாநில அரசுகள்தான் உரிய நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

