புதுடெல்லி: இந்திய அரசின் தடுப்பூசித் திட்டம் பாகுபாடு உடையது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
எந்தவிதமான பகிர்மானக் கொள்கை இன்றியும் திட்டமிடாமலும் தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்படுவதாக டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது.
இந்தியா ஆக்சிஜன் இல்லாமல் மூச்சுத் திணறுகிறது என்றும் சுய மனநிறைவு கொள்ளும் இந்திய அரசுக்கும் அதன் திறமையின்மைக்கும் நன்றி என்றும் ராகுல் கூறியுள்ளார்.
"மத்திய அரசின் புதிய தடுப்பூசிக் கொள்கையால் 18 வயது முதல் 45 வயதுள்ளவர்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி கிடைக்காது. இடைத்தரகர்கள் தடுப்பூசிகளை வாங்கி வைத்துக்கொண்டு விருப்பம்போல் விலை நிர்ணயிப்பார்கள்.
"விளிம்புநிலை மக்களுக்குத் தடுப்பூசி கிடைக்க எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை," என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து ராகுல் மீண்டு வர பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் மத்திய அரசின் திட்டமானது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் செயல் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

