புதுடெல்லி: உலக அளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட நாடுகளில் முதன்மையான இடத்தில் உள்ள இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட என்ன காரணம் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசின் மோசமான திட்டமிடலே நாட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டதாக தினத்தந்தி நாளேடு தெரிவித்துள்ளது.
"எந்தவிதத் திட்டமும் இல்லாதது தான் ரெம்டெசிவிர் தடுப்பூசி மருந்து பற்றாக்குறை ஏற்பட காரணம். சரியான திட்டமிடல் இல்லாததே ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட காரணம். இது மத்திய அரசின் தோல்வியாகும்," என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
கொரோனா முதல் அலைக்கும் இரண்டாவதுக்கும் இடையே 9 மாத காலம் இடைவெளி இருந்தபோதும் மத்திய அரசு அதைப் பயன்படுத்தத் தவறிவிட்டது என அவர் மேலும் சாடியுள்ளார்.
இதற்கிடையே, மக்களுக்குத் தடுப்பூசி போடும் விஷயத்தில் மத்திய அரசு 'ஒரே தேசம் ஒரே விலை' என்பதை அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. மத்திய அரசின் தடுப்பூசிக் கொள்கை பிற்போக்குத்தனமாகவும் சமத்துவமற்றதாகவும் உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

