புதுடெல்லி: கொவிட்-19 தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் செய்து மத்திய அரசு அறிவித்திருப்பது நாட்டுக்கே பேரழிவு என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். தடுப்பூசியை அரசு மருத்துவமனைகள் ரூ.400க்கும் தனியார் மருத்துவமனைகள் ரூ. 600க்கும் கொள்முதல் செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இது நாட்டிற்கே பேரழிவு என்று குறிப்பிட்டுள்ளார். மோடியின் நண்பர்களுக்கான வாய்ப்பு இது என்றும் மத்திய அரசு மக்களுக்கு செய்துள்ள அநீதி என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இதே போல் கொரோனா தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் செய்து இருப்பதன் மூலம் மாநில அரசுகளை மத்திய அரசு சிக்கலில் மாட்டிவிட்டு தப்பித்துக் கொண்டாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். ஐந்து பேர்களைக் கொண்ட நடுத்தரக் குடும்பத்தில் 2 தவணை தடுப்பூசியை வாங்கிப் போட்டுக்கொள்ள முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பினார். இதுதான் மலிவு விலை தடுப்பூசியா என்றும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

