புதுடெல்லி: புதுடெல்லியில் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 306 பேர் கொரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.
கடந்த ஆண்டு கொவிட்-19 தொற்று நெருக்கடி தொடங்கியதற்குப் பிறகு இதுவே ஆக அதிகமான கொவிட்-19 மரணப் பதிவு என்று கூறப்படுகிறது.
ஏனெனில் இப்போது கொவிட்-19 சிகிச்சைக்குத் தேவைப்படும் ஆக்சிஜன் கிடைக்காமல் டெல்லி மருத்துவமனைகளில் நோயாளிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆக்சிஜன் தோம்புக்கான தட்டுப்பாடு நீடித்தால் கொவிட்-19 மரண எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் 'ஆக்சிஜன் முடிந்துவிட்டது' என்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் அங்குள்ள நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது. டெல்லியில் உள்ள சிறிய மருத்துவமனைகளும் இந்த ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நோயாளிக்குத் தேவைப்படும் ஆக்சிஜனைப் பெற்று வருவதற்கு நோயாளியின் உறவினர்கள் ஆக்சிஜன் நிரப்பும் நிலையங்களுக்குப் படையெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து பல மாநிலங்களில் ஆக்சிஜன் தோம்புகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்நிலையங்கள் அங்கு வரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறி வருகின்றன. நோயாளிகள் பலர், ஆக்சிஜனுக்காகக் காத்திருந்து உயிர்விடும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சாதாரணமாக நாட்டின் மொத்த ஆக்சிஜன் விநியோகத்தில் 15% சுகாதாரத்துறை பயன்பாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த நெருக்கடி காலத்தில் 90 விழுக்காடு அதாவது 7,500 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் மருத்துவப் பயன்பாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக மூத்த சுகாதாரத்துறை அதிகாரி ராஜேஷ் புஷான் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திண்டாடி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் சிகிச்சைக்குத் தேவையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
"தொற்று தாக்கினால் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்துவிடும். ஆனால், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் போதிய படுக்கையின்மை ஆகிய காரணங்களால் அதிகமான நோயாளிகள் உயிரிழக்க நேரிடுகிறது. இதற்கு மத்திய அரசே பொறுப்பு," என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

