புதுடெல்லி: இரண்டாம் கட்ட கிருமித்தொற்று அபாய உருவெடுத்து இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வரும் நிலையில் தொற்றுக்கு பலியாவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
தலைநகர் டெல்லியிலும் மகாராஷ்டிரா மாநிலத்திலும் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் மரண எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
அதனால், மாண்டோரின் சடலங்கள் எரியூட்டு நிலையங்கள் முன்பும் நல்லடக்க மயானங்கள் முன்பும் ஏராளமாகக் குவிந்து வரும் அதிர்ச்சித் தகவலை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
அவ்வாறு ஏராளமான சடலங்கள் டெல்லியின் புறநகர்ப் பகுதியான காஸியாபாத்திலுள்ள ஹிண் டன் தகனச் சாலை முன்பு காணப்பட்டதாக இந்தியாவில் உள்ள ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
தகனம் செய்வதற்காகப் பல மணி நேரம் காத்திருந்த தமது தந்தையின் சடலத்தை கொவிட்-19 மறைப்பு உடையணிந்த இளம்பெண் ஒருவர் கட்டிப் பிடித்து கதறி அழுத காட்சியையும் அவர் கண்டிருக்கிறார். அந்த இடத்தின் அருகில் ஆம்புலன்ஸ் ஒன்றில் வந்திறங்கிய மற்றொரு சடலத்தைக் கண்டு அதன் உறவுப் பெண்கள் இருவர் கட்டிப் பிடித்து அழுது தங்களது தாங்க இயலாத சோகத்தை வெளிப் படுத்தினர். வரலாறு காணாத அளவில் மரண எண்ணிக்கை உயர்ந்து வருவதால் நாடு முழுவதுமே இதுபோன்ற ஒரு துயர நிலை நிலவுவதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் வெள்ளிக்கிழமை பதிவான மரண எண்ணிக்கை 348. ஒரே நாளில் இந்த அளவுக்கு அதிகமானோர் தொற்றால் மாண்டது அன்றைய தினம்தான். நான்கு நிமிடங்களுக்கு ஒரு மரணம் என்று இது கணக்கிடப்பட்டுள்ளது. அதே நாளில் நாடு முழுவதும் மாண்டோர் எண்ணிக்கை 2,200.
கிருமிப் பரவல் உச்சமடைந்ததால் நான்கு நிமிடத்திற்கு ஒருவர் மரணம்

