ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் மாவட்டத்தில் நிம்தி சந்தவாதா எனும் கிராமத்தைச் சேர்ந்த ஹனுமன் பிரஜாபத் - சுக்கி தேவி தம்பதியருக்கு மணமாகி 35 ஆண்டுகள் கழித்து கடந்த மார்ச் 3ஆம் தேதி குழந்தை பிறந்தது. நீண்ட காலம் கழித்து குழந்தை பிறந்ததால் ஹனுமன் பிரஜாபத் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்துள்ளார். அந்தப் பெண் குழந்தைக்கு ரியா என பெயர் சூட்டினார்.
பொதுவாக குழந்தை பிறந்தால் சிலகாலம் தாய் வீட்டில் வைத்து பராமரிப்பார்கள். அதன்படி ஹர்சோலா என்னும் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சுக்கி தேவி சென்றார். பின்னர் மனைவியையும் குழந்தையையும் தமது வீட்டுக்கு அழைத்து வர நாள் குறித்த ஹனுமன் பிரஜாபத், அதற்காக ஹெலிகாப்டர் ஒன்றை ஏற்பாடு செய்தார்.
அவரது ஊருக்கும் அவரின் மனைவி இருந்த ஊருக்கும் இடையில் 40 கிலோமீட்டர் தூரம். இதனை பத்து நிமிடத்தில் ஹெலிகாப்டர் கடந்தது. இதற்கான கட்டணம் சுமார் ரூ.5 லட்சம். கடந்த புதன் கிழமை மனைவி, குழந்தையுடன் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய பிரஜாபத்தை அவரது கிராம மக்கள் வியப்புடன் கண்டு பாராட்டினர்.

