மும்பை: இந்தியாவில் கொவிட்-19 நிலவரம் மோசமடைந்து வருவதால் அங்கிருந்து வருவோருக்கு சில நாடுகள் தடை விதித்து வருகின்றன. ஏற்கெனவே இங்கிலாந்து, சிங்கப்பூர், கனடா போன்றவை தடை விதித்துள்ள நிலையில் ஐக்கிய அரபு சிற்றரசுகள் அறிவித்த தடை இன்று முதல் நடப்புக்கு வருகிறது.
அதனால் துபாய்க்குச் செல்பவர்கள் வெள்ளிக்கிழமையும் சனிக் கிழமையும் அவசரமாகக் கிளம்பிச் சென்றனர். அதன் காரணமாக விமானப் பயணக் கட்டணங்கள் பத்து மடங்குக்கு மேல் அதிகரித்துவிட்டன. மும்பையிலிருந்து துபாய் செல்வதற்கான ஒருவழி பயணக் கட்டணம் 80,000 ரூபாய்க்கு (S$1,400) உயர்ந்தது. வழக்கமான கட்டணத்தைக் காட்டிலும் இது கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகம்.
அதேபோல புதுடெல்லியில் இருந்து துபாய் செல்வதற்கான கட்டணம் கடந்த இரு நாட்களாக 50,000 ரூபாய்க்கு அதிகரித்தது. இது வழக்கமான கட்டணத்தைக் காட்டிலும் சுமார் ஐந்து மடங்கு அதிகம். இன்று தடை நடப்புக்கு வருவதால் எந்த ஒரு விமானமும் இன்றைய பயணத்திற்கான முன்
பதிவை ஏற்கவில்லை. ஐக்கிய அரபு சிற்றரசுகள் விதித்துள்ள தடை அடுத்த பத்து நாட்களுக்கு நடப்பில் இருக்கும்.
"சனிக்கிழமை துபாய்க்கு 12 விமானங்களை இயக்க ஏற்பாடு செய்தோம். அத்தனையிலும் இருக்கைகள் நிரம்பிவிட்டன," என்று வாடகை விமான நிறுவனம் ஒன்றின் பேச்சாளர் கடந்த வெள்ளிக்கிழமை ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

