கும்பமேளா சுகாதார ஊழியர்கள் 65 பேருக்கு கொவிட்-19 தொற்று
ரிஷிகேஷ்: அண்மையில் நடைபெற்று முடிந்த கும்பமேளா பணியில் ஈடுபடுத்தப்பட்ட சுகாதாரத்துறை ஊழியர்களில்
65 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுள் மருத்துவர்களும் அடக்கம். அவர்கள் அனைவரும் தடுப்பூசி போடப்பட்ட பின்னரே, அந்தப் பணியில் அமர்த்தப்பட்டார்கள். லட்சக்கணக்கான பேர் கலந்துகொண்ட கும்பமேளா நிகழ்வு சுமார் 641 ஹெக்டேர் நிலப்பரப்பிற்கும் அதிகமான இடத்தில் நடைபெற்றது.
டெல்லியில் ஆக்சிஜன் உருளையை பதுக்கி வைத்து விற்றவர் கைது
புதுடெல்லி: டெல்லியின் தாஷ்ராத்புரி பகுதியில் ஒரு வீட்டில் ஆக்ஸிஜன் (உருளை) சிலிண்டர்களை பதுக்கிவைத்து சட்டவிரோத வியாபாரம் நடப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலிசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அனில் குமார் என்பவரின் வீட்டின் கீழ்த்தளத்தில் 67 லிட்டர் கொள்ளளவு கொண்ட 32 பெரிய ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பெரிய சிலிண்டரிலிருந்து சிறிய சிலிண்டருக்கு ஆக்ஸிஜனை மாற்றி அதனை 12,500 ரூபாய்க்கு அவர் விற்பனை செய்து வந்தார். ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அனில்குமார் கைது செய்யப்பட்டார்.
ஆக்சிஜனுக்கு கலால் வரி ரத்து
புதுடெல்லி: இந்தியா முழுவதும் கிருமித்தொற்றின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் பலர் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்து வருகின்றனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று உயர்மட்டக் குழு ஆலோசனையில் ஈடுபட்டது. ஆலோசனை முடிவில் ஆக்சிஜன் தயாரிப்பு, சேமிப்பு தொடர்பான உபகரணங்கள் இறக்குமதி செய்ய விதிக்கப்படும் கலால் வரி, சுகாதார செஸ் வரி உள்ளிட்டவை மூன்று மாதங்களுக்கு ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில்
மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், ஹர்ஷ் வர்தன், பியூஸ் கோயல் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
எம்எல்ஏ உயிரைப் பறித்த தொற்று
போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ கலாவதி புரியா, 49. இவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கடந்த 11ஆம் தேதி அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசக்கருவி உதவியுடன் சிகிச்சையளிக்கப் பட்டு வந்தது. இந்நிலையில் கலாவதி புரியா நேற்று அதிகாலை 2.30 மணியளவில் மாரடைப்பால் மாண்டார்.

