புதுடெல்லி: இந்தியாவில் வேக
மாகப் பரவி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
அந்த வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி மே 1ஆம் தேதி முதல் 3ஆம் கட்ட தடுப்பூசி திட்டப்பணிகள் நாடு முழுவதும் தொடங்கப்படுகி
றது.
இதற்காக மாநிலங்கள் மேற் கொண்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் மற்றும் கொரோனாவுக்கு எதிரான தொழில்நுட்பம் மற்றும் தரவு மேலாண்மைக்குழுத் தலைவர் சர்மா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குப் பல் வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப் பட்டன.
இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "3ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி திட்டம் 1ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன் கூடுதல் தனியார் தடுப்பூசி மையங்களை உருவாக்க மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன.
"இதற்காக தனியார் மருத்துவமனைகள் மற்றும் தொழில்துறை அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி மேற்படி மையங்களை உருவாக்க வேண்டும்.
இந்த மையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடுதல், பக்க விளைவுகள் ஏற்பட்டால் அது குறித்து தெரிவித்தல் மற்றும் நிர்வகித்தல், கோவின் இணையத்தளத்தை பயன்படுத்துதல், கூட்டத்தை ஒழுங்குபடுத்த சட்டம்-ஒழுங்கு அதிகாரிகளுக்கு உதவுதல் போன்ற பயிற்சிகளை வழங்க வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.

