கோவை: தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் உச்சம் தொட்டு வரும் கொரோனா கிருமிப் பரவலால் மக்கள் அல்லாடி வருகின்றனர்.
இந்தப் பாதிப்பிலிருந்து மீள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, கோவையைச் சேர்ந்த 76 வயது முதியவர் ஒருவர் தனது 69 வயது மனைவியை கொரோனா தடுப்பூசி போடுவதற்கு துடியலூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்.
தனது மனைவியால் நடக்கமுடியாத நிலையில், மருத்துவமனையில் சக்கர நாற்காலி வசதி இல்லாததால், இந்த தள்ளாத வயதிலும் தன் கைகளாலேயே மருத்துவமனைக்குள் மனைவியைத் தூக்கிக்கொண்டு சென்றது காண்போரை நெகிழ வைத்ததாக வெப்துனியா தகவல் கூறியுள்ளது.
இதுபோன்ற வயதானவர்கள் தடுப்பூசி போட வரும்போது சக்கர நாற்காலி வசதியைச் செய்துகொடுக்கவேண்டும் என்பது ஒவ்வொரு மருத்துவமனையின் அடிப்படை கடமையாகும் என்று வலைத்தளவாசிகள் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.
மருத்துவமனை வாசலில் இருந்து மருத்துவமனைக்குள் கொண்டுசெல்ல ஒரு சக்கர நாற்காலி கூட இல்லையா? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தேர்தல் நேரத்தில் வயதானவர்கள் வாக்களிக்க காட்டும் அக்கறையை இந்தக் கொரோனா காலகட்டத்திலும் காட்டவேண்டும் என்றும் இனிமேலாவது வயதானவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல சக்கர நாற்காலி வசதிகளைச் செய்துகொடுக்க அனைத்து மருத்துவமனை நிர்வாகமும் முன்வரவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

