இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை மீண்டும் உச்சத்திற்குச் சென்றுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு 386,452 பேருக்கு தொற்று ஏற்பட்டதாக நேற்றுக் காலை சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
மேலும் மரண எண்ணிக்கையும் மூவாயிரத்துக்கு மேல் தொடருகிறது. வியாழக்கிழமை 3,645 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று அதில் சிறிதளவு குறைந்து 3,498 என அறிவிக்கப்பட்டது. மொத்த பாதிப்பு 18,762,976 ஆகவும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 208,330 ஆகவும் அதிகரித்துள்ளன.
உலகின் பல நாடுகளுக்கு தடுப்பூசியை அனுப்பி உதவி வந்த இந்தியாவுக்கு தற்போது உதவி தேவைப்படுகிறது. அதனை அறிந்து 40 ஏழை, பணக்கார நாடுகள் உதவிக்கு வந்துள்ளன.
சிங்கப்பூரும் அந்தப் பட்டியலில் உள்ளது. ஆக்சிஜன் உருவாக்கும் 550 சாதனங்கள், 10,000 ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஆகியவற்றோடு மருந்துப் பொருட்களும் அந்நாடுகள் அனுப்ப இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

