தட்டுப்பாடு: 18 வயதானோருக்கு தடுப்பூசி போடுவதில் சிக்கல்

தட்டுப்பாடு: 18 வயதானோருக்கு தடுப்பூசி போடுவதில் சிக்கல்

3 mins read
d442d362-d056-4805-94ee-782bae77ebd7
-

புதுடெல்லி: இரண்டாவது அலை கிருமித்தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், தடுப்பூசி பற்றாக் குறைக் காரணமாக பல மாநிலங்களில் அந்தத் திட்டம் தொடங்குவதில் சிக்கல் நிலவுகிறது.

ஒவ்வொரு நாளும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து மே 1 தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது.

மேலும், மாநில அரசுகள் நேரடியாக மருந்து நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியை கொள்முதல் செய்யவும் மத்திய அரசு அனுமதி அளித்தது.

இருப்பினும், தடுப்பூசி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக இன்று இந்தத் திட்டத்தைத் தொடங்க இயலாது என்று பல மாநிலங்கள் தெரிவித்துள்ளன. ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, அசாம், மேற்கு வங்காளம், பஞ்சாப், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று தடுப்பூசி போடும் பணியைத் தொடங்க இயலாது என்று அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளன. இம்மாநிலங்கள் ஒரு வார கால அவகாசம் கேட்டுள்ளன.

மேலும் சில மாநிலங்கள் தற்போதைக்குத் இந்தத் திட்டத்தைத் தொடங்க இயலாது என்று கூறியுள்ளன.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறுகையில், "45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போட்டு முடித்த பிறகே 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதை தொடங்குவோம்," என்றார்.

எனவே ஆந்திராவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்க குறைந்த பட்சம் 4 மாதங்கள் தாமதம் ஆகலாம் எனத் தெரிகிறது. இதனால், திட்டமிட்டபடி பல மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடும் திட்டம் இன்று தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசிப் பணியும் மூன்று நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படு வதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

மேலும் தடுப்பூசி போட இணையம் மூலம் 2.45 கோடி இளையர்கள் பதிவு செய்துள்ள போதிலும் அவர்களுக்கு எந்தத் தேதியில் எந்த மருத்துவமனையில் தடுப்பூசி போடப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

சிங்கப்பூர் உள்ளிட்ட 40 நாடுகள் உதவி

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை மீண்டும் உச்சத்திற்குச் சென்றுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு 386,452 பேருக்கு தொற்று ஏற்பட்டதாக நேற்றுக் காலை சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது. மேலும் மரண எண்ணிக்கையும் மூவாயிரத்துக்கு மேல் தொடருகிறது. வியாழக்கிழமை 3,645 பேர்

உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று அதில் சிறிதளவு குறைந்து 3,498 என அறிவிக்கப்பட்டது. மொத்த பாதிப்பு 18,762,976 ஆகவும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 208,330 ஆகவும்

அதிகரித்துள்ளன.

உலகின் பல நாடுகளுக்கு தடுப்பூசியை அனுப்பி உதவி வந்த இந்தியாவுக்கு தற்போது உதவி தேவைப்படுகிறது. அதனை அறிந்து 40 ஏழை, பணக்கார நாடுகள் உதவிக்கு வந்துள்ளன. சிங்கப்பூரும் அந்தப் பட்டியலில் உள்ளது. ஆக்சிஜன் உருவாக்கும் 550 சாதனங்கள், 10,000 ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஆகியவற்றோடு மருந்துப் பொருட்களும் அந்நாடுகள் அனுப்ப இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.