திருவனந்தபுரம்: புதிய உருமாறிய கொவிட்-19 கிருமிகள் கேரள மாநிலத்தில் வெகுவேகமாகப் பரவி வருகின்றன.
அண்மைய தரவுகளின்படி, அங்கு கொரோனா தொற்றியுள்ளோரில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டினரிடம் உருமாறிய கிருமிகள் கண்டறியப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 15ஆம் தேதிவரை, பிரிட்டனில் உருவான உருமாறிய கிருமி, இந்திய இரட்டை உருமாற்றக் கிருமி ஆகியவற்றின் தாக்கம் 15 முதல் 40 விழுக்காடாக இருந்தது.
அவ்வகை கிருமிகளால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து மூன்று பேருக்குப் பரவுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் நேற்று முன்தினம் 42,464 கொரோனா பாதிப்புகளும் 63 கொரோனா மரணங்களும் பதிவாகின.
இந்நிலையில், மருத்துவத்திற்குப் பயன்படும் ஆக்சிஜனையும் அதற்கான சிலிண்டர்களையும் சட்டவிரோதமாகப் பதுக்கி வைப்போர் மீது கடும் நடவடிக்கை பாயும் என கேரள அரசு எச்சரித்து உள்ளது.
இன்று முதல் ஒன்பது நாள்களுக்கு அங்கு முழு ஊரடங்கு நடப்புக்கு வரவிருக்கிறது.
உ.பி.யில் மரணங்கள் இரட்டிப்பு
இதனிடையே, உத்தரப் பிரதேச மாநிலத்தின் 15 மாவட்டங்களில் கடந்த மூன்று வாரங்களில் கொரோனா தொற்றால் மரணம் அடைந்தோர் இரண்டு அல்லது மூன்று மடங்காக உயர்ந்துள்ளதாக 'தி இந்து' செய்தி கூறுகிறது. லக்னோ, வாரணாசி, பிரயாக்ராஜ், கான்பூர் ஆகியவையே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களாக நீடிக்கின்றன.
மேலும் 36 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்த மாநிலத்தில் நேற்று முன்தினம் 26,789 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது; மேலும் 353 பேர் உயிரிழந்துவிட்டனர்.
ஒடிசாவில் பாதிப்பு 16% அதிகரிப்பு
இவ்வேளையில், ஒடிசா மாநிலத்தில் புதிய உச்சமாக நேற்று முன்தினம் 12,238 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. முந்திய நாளைக் காட்டிலும் இது 16.31% அதிகம் எனக் கூறப்பட்டது. அங்கு கொரோனா பாதிப்பு 12,000க்கு மேல் பதிவாகியிருப்பது இதுவே முதன்முறை.