533 மாவட்டங்களில் 10 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிப்பு
ஜெனீவா: இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. கடந்த வாரம் தினசரி பாதிப்பு எண்ணிக்கையானது 4 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
நேற்று காலை 8.00 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,48,421 கிருமித்தொற்றுப் பாதிப்பு பதிவாகியுள்ளது. 4,205 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
அதே காலக்கட்டத்தில் 3,55,338 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மொத்தம் 2,33,40,938 பேர் தொற்றுப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் 37,04,099 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,54,197 பேர் தொற்றுப் பாதிப்பால் பலியாகிவிட்டனர். இதுவரை 1,93,82,642 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த இந்தியாவின் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் முடக்கநிலையை அறிவித்து கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளன.
மார்ச் 9ஆம் தேதிக்குப் பின் நேற்று இரண்டாவது நாளாக கிருமித்தொற்றுக்குச் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் புதிய தொற்று எண்ணிக்கையும் குறைந்துள்ளது. எனினும் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் 41,000 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடுகையில் கணிசமாகக் குறைந்துள்ளது. கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் சராசரியாக 40,000 புதிய தொற்றுகள் பதிவாகி வருகின்றன.
தொற்று மரணங்களில் மகாராஷ்டிராவில் ஆக அதிகமாக 800 தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளன.
தமிழ்நாடு, டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய ஒவ்வொரு மாநிலத்திலும் நாள் ஒன்றுக்கு 200க்கு மேற்பட்ட தொற்று மரணங்கள் பதிவாகி வருகின்றன.
நாட்டில் 700க்கு மேற்பட்ட மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் 533 மாவட்டங்களில் 10 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்ததாக இண்டியன் எக்ஸ்பிரஸ் இணைய இதழ் தெரிவித்தது.
கிராமப்புறங்களை விட்டுவைத்திருந்த கிருமித்தொற்று, இப்போது அடிக்கும் இரண்டாவது அலையில் அங்கும் அதிவேகமாகப் பரவத்தொடங்கியுள்ளது.
இந்த அளவுக்கு தொற்று வேகமாகப் பரவுவதற்கு முக்கியமான காரணம், இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கிருமித்தொற்று எனக் கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் முதன்முதலில் உருவானதாகக் கூறப்படும் 'கொவிட்-19' தொற்று உலக நாடுகளுக்குப் பரவி உலகத்தையே முடக்கிப்போட்டுள்ள நிலையில் இப்போது உருமாறிய கொவிட்-19 தொற்று உலக நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலையும் நெருக்கடியையும் தந்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் பரவலாகக் காணப்படும் உருமாறிய கொரோனா தொற்று உலகளவில் 44 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதற்கு முக்கியக் காரணம் பி.1.617 எனும் உருமாறிய கொரோனா தொற்றுதான். இது 2020 அக்டோபர் மாதம் இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது.
"இந்த கிருமிதான் இப்போது உலக சுகாதார அமைப்பின் 6 மண்டலங்களில் உள்ள 44 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
"இதுவரை 4,500 மாதிரிகளில் உருமாறிய நுண்ணுயிர்த்தொற்று கண்டறியப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"இந்தியாவைத் தவிர்த்து 'பி.1.617' உருமாறிய கொரோனா தொற்று பிரிட்டனில்தான் அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளது," என உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பரவி வரும் பி.1.617 வகை உருமாறிய கொரோனா, மற்ற நுண்ணுயிர்த் தொற்றுகளைக் காட்டிலும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்று முன்னதாக அந்த அமைப்பு தெரிவித்திருந்தது.

