புதுடெல்லி: இருபது மாநிலங்களில் கிருமித்தொற்றுப் பரவல் குறைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிப்பதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் மகாராஷ்டிரா, தமிழகம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் சில மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
பீகாரில் ஊரடங்கு உத்தரவு மே 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் புதன்கிழமை ஒரே நாளில் 43,529 பேருக்கு கிருமி தொற்றியுள்ளது. 95 பேர் பலியாகிவிட்டனர். அங்கு ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 6,053ஆக கூடியுள்ளது.
டெல்லியில் நேற்று காலை நிலவரப்படி, புதிதாக 10,489 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 308 உயிரிழந்துவிட்டனர்.
கர்நாடகாவில் தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 592,182ஆக கூடியுள்ளது. இதன் மூலம் மகாராஷ்டிராவை (546,129) முந்தியுள்ளது. அங்கு 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நாடு முழுவதும் 12 மாநிலங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைவிட அதிகமாக உள்ளது என சுகாதார அமைச்சின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
எட்டு மாநிலங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை விட சற்று அதிகமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார். இதே வேளையில் 187 மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

