50 ஊழியர்களுக்குத் தொற்று என பாரத் பயோடெக் நிறுவன இயக்குநர் தகவல்
மும்பை: எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தியானது 100 மில்லியனாக அதிகரிக்கும் என சீரம் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தகவலை அந்நிறுவனத்தின் ஒழுங்குமுறை விவகாரங்களுக்கான இயக்குநர் பிரகாஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
இதேவேளையில் கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தியானது 80 மில்லியனாக உயரும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், செப்டம்பர் மாதமும் இதே அளவில் உற்பத்தி தொடரும் என இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
2 முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான அடுத்தகட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதற்கட்டமாக பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மத்திய மருந்துத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி தெரிவிக்கிறது.
நாடு முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக ஊடகங்களில் அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதையடுத்து தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தியானது ஜூலையில் 30.30 கோடியாக இருக்கும் என்றும் ஆகஸ்ட் மாதம் இந்த எண்ணிக்கை 70.82 மில்லியனாக இருக்கும் என்றும் பாரத் பயோடெக் நிறுவன இயக்குநர் கிருஷ்ணமோகன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் வெளிநாடுகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களின் காரணமாகவே 60.60 மில்லியன் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக பாஜக தெரிவித்துள்ளது.
இந்திய குடிமக்களுக்குத் தடுப்பூசி போடாமல் வெளிநாடுகளுக்குப் பல கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு ஏற்றுமதி செய்ததை ஏற்க இயலாது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்நிலையில் பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா விளக்கமளித்துள்ளார்.
சீரம் நிறுவனம் உற்பத்தி செய்யும் கோவிஷீல்டு தடுப்பூசியின் அறிவுசார் சொத்துரிமை வெளிநாட்டைச் சேர்ந்த அஸ்ட்ராஸெனகா நிறுவனத்திடம் உள்ளது. எனவே சீரம் நிறுவனம் உற்பத்தி செய்யும் தடுப்பூசிகளில் ஒரு பகுதியை வெளிநாடுகளுக்குக் கொடுக்கவேண்டிய கடமை உள்ளது என்று சம்பிட் பத்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு நிறுவனங்களுமே தடுப்பூசி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை கொள்முதல் செய்தபோது கையெழுத்திட்ட ஒப்பந்தங்களின்படி வெளிநாடுகளுக்கு குறிப்பிட்ட அளவிலான தடுப்பூசிகளைத் தரவேண்டி உள்ளது என்றும் சம்பிட் பத்ரா விவரித்துள்ளார்.
இவ்விஷயத்தில் எதிர்க்கட்சியினர் தவறான பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதாக அவர் சாடினார்.
இதற்கிடையே தங்கள் நிறுவனம் குறித்து பிரதமரிடம் சில தரப்பினர் புகார் அளித்திருப்பதை அறிந்தபோது தமது நெஞ்சம் சிதறுண்டு போனதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுசித்ரா தெரிவித்துள்ளார்.
குறைவான பணியாளர்கள், முழுநேர ஊரடங்கு உள்ளிட்ட பல சவால்களுக்கு மத்தியில், மருந்து உற்பத்தியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், நிறுவனப் பணியாளர்களில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு விடுமுறையில் உள்ளனர் என்றும் குறைவான பணியாளர்களுடன் 24 மணி நேரமும் தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதற்கிடையே இரு தடுப்பூசிகளுக்கு மத்தியில் 12 முதல் 16 வாரங்கள் இடைவெளி இருப்பது நல்லது என நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், தொற்றில் இருந்து மீண்டவர்களும் கூட, ஆறு மாதங்களுக்குப் பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து 150,000 'ஸ்புட்னிக்-வி' தடுப்பூசிகள் இன்று இந்தியா வந்தடையக்கூடும்.

